தேசிய குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு வழங்கும் தேசிய குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு வழங்கும் தேசிய குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை வெளியிட்டுள்ள செய்தி: குழந்தைகள் சேவையில் ஈடுபட்டுள்ள 3 தனிநபர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி மனிதசேவை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் நலன், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் மேம்பாட்டுக்காக குறைந்தது 10 ஆண்டுகள் சேவை ஆற்றியிருக்கும் தனிநபர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுடன் தனிநபர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம், வெள்ளிப் பட்டயம், சான்றிதழ் வழங்கப்படும்.
அதேபோல, குழந்தைகள் சேவையில் ஈடுபட்டுள்ள 3 தனிநபர்கள் மற்றும் 5 தொண்டு நிறுவனங்களை அங்கீகரித்து ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் நலச்சேவை விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகின்றன. குழந்தைகள் நலனுக்காக பல ஆண்டுகள் சேவை ஆற்றியிருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுடன் தனிநபர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் மற்றும் பட்டயம், நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் பட்டயம் வழங்கப்படும். இந்த விருதுக்கு கர்நாடக அரசு நியமித்துள்ள குழு, விண்ணப்பங்களை ஆராய்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்.
2018-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள துறையின் துணை இயக்குநரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை ஜூன் 8-ஆம் தேதிக்குள் மாவட்ட துணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.