இடைத்தேர்தல்: காங்கிரஸ்- ம.ஜ.த. வேட்பாளர்களை ஆதரித்துஇன்று முதல் சித்தராமையா பிரசாரம்
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில்
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா திங்கள்கிழமை முதல் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
கர்நாடகத்தில் சிவமொக்கா, மண்டியா, பெல்லாரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள், ஜம்கண்டி, ராமநகரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நவம்பர் 3-இல் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.
இந்தத் தேர்தலில் மண்டியா, சிவமொக்கா மக்களவைத் தொகுதிகள், ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ம.ஜ.த. வேட்பாளர்களும், பெல்லாரி மக்களவைத் தொகுதி, ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ், ம.ஜ.த. வேட்பாளர்களை ஆதரித்து திங்கள்கிழமை (அக்டோபர் 22) முதல் அடுத்த 10 நாள்கள் தொடர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முன்னாள் முதல்வர் சித்தராமையா திட்டமிட்டிருக்கிறார்.
இதன்படி, அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பாவையும், அக்டோபர் 24-இல் மண்டியா மக்களவைத் தொகுதியில் ம.ஜ.த. வேட்பாளர் சிவராமே கெளடாவையும், அக்டோபர் 25-இல் சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் ம.ஜ.த. வேட்பாளர் மதுபங்காரப்பாவையும், அக்டோபர் 26, 27 ஆகிய நாள்களில் ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த்சித்துநியாம கெளடாவையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதைத் தொடர்ந்து, அக்டோபர் 28,29-ஆம் தேதிகளில் பெல்லாரி மக்களவைத் தொகுதி, அக்டோபர் 30, 31-ஆம் தேதிகளில் ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டாம்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக முன்னாள் முதல்வர் சித்தராமையா பெல்லாரிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றிருக்கிறார். காங்கிரஸ்- ம.ஜ.த. வேட்பாளர்களின் வெற்றிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பிரசாரம் முக்கியமானது என்று கருதப்படுகிறது.