பொதுப்பணித் துறை அமைச்சர் ரேவண்ணா மீதான நில அபகரிப்பு புகார் குறித்து முதல்வர் குமாரசாமி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா
வலியுறுத்தினார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான ஏ.மஞ்சு, பொதுப் பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தனது அதிகாரத்தை பயன்படுத்தி, 54 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தேவெ கெளடா குடும்பத்தினர் எந்த கருத்தையும் கூறாமல் மெளனமாக உள்ளனர்.
அமைச்சர் பதவி வகிப்பவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு நிலத்தை அபகரித்துள்ளது, வேலியே பயிரை மேயும் கதையாக உள்ளது. எனவே, இதுகுறித்து முதல்வர் குமாரசாமி விளக்கம் அளிக்க வேண்டும். தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே நிலத்தை அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மற்றவர்களை குறைகூற முதல்வர் குமாரசாமியால் முடியாது என்றார்.