உளவுத் துறை வாயிலாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்காணிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் நடிகை சுமலதா புகார் அளித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் சுமலதா திங்கள்கிழமை புகார் மனுவை அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது: -
மண்டியா மக்களவைத் தொகுதியில் தனது மகன் நிகிலை வெற்றி பெறச் செய்வதற்காக, அரசு இயந்திரங்களை முதல்வர் குமாரசாமி பயன்படுத்தி வருகிறார்.
வாக்காளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவதாக, ஆசை வார்த்தைகளைக் கூறி வருகிறார். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல ஆட்சியை வழங்க அதிகாரத்தை மக்கள் வழங்கியுள்ளனர். இதனை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களைக் கவர முயற்சிப்பது தவறாகும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நாளன்று மக்கள் கூட்டத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற நோக்கில், பேருந்துகள், லாரிகள், கார்களில் தங்கள் ஆதரவாளர்களை பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளனர்.
மஜதவுக்கு பணி செய்யுமாறு, மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
தேர்தலில் போட்டியிடுவதாக நான் (சுமலதா) அறிவித்தவுடன், உளவுத் துறையின் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறேன். இது ஆளும் கட்சிக்கு அழகைத் தராது என்றார்.