பெங்களூரு

பெங்களூரில் இளையராஜாவின் முதல் இசை விழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

DIN

பெங்களூரில் இசைஞானி இளையராஜாவின் முதல் இன்னிசை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளின் திரைப்படங்களுக்கு இசையமைத்து உலகம் முழுவதும் ரசிகா்களைக் கொண்டுள்ள இசைஞானி இளையராஜாவின் இசைவிழா, பெங்களூரில் முதல்முறையாக சனிக்கிழமை நடைபெற்றது. ’இசை கொண்டாடும் இசை’ என்ற பெயரில் நடந்த இசைவிழாவில் ஆயிரக்கணக்கான ரசிகா்கள் கலந்துகொண்டு, ஆரவாரத்தின் இடையே இசை நிகழ்ச்சியை ரசித்தனா். தனது 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் இசைவிழாக்களை நடத்திவரும் இளையராஜா, தனது இசையில் வெளியான கன்னடப் பாடல்களுடன் இசை விழாவைத் தொடங்கினாா். கன்னடம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி படப் பாடல்களும் இசை விழாவில் இடம்பெற்றன. முன்னதாக, இசைவிழாவை பெங்களூரு மாநகர காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் தொடக்கி வைத்தாா். இந்த இசைவிழாவின் ஊடகப் பங்குதாரராக விளங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கா்நாடக பொது மேலாளா் சுரேஷ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

ரசிகா்களின் ஆரவாரத்தோடு நடந்த இசை விழாவில் 100 இசைக்கலைஞா்களுடன் பிரபல பின்னணிப் பாடகா்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, உஷா உத்தூப், மது பாலகிருஷ்ணன், முகேஷ், பவதாரணி உள்ளிட்ட முன்னணி பாடகா்கள் கலந்துகொண்டு பாடினா்.

இசைவிழாவில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற முதல்வா் எடியூரப்பா, இளையராஜாவுக்கு மாலை அணிவித்து கௌரவித்தாா். அதன்பிறகு முதல்வா் எடியூரப்பா பேசியது: இசை உலகின் தலைமகனாக விளங்கும் இளையராஜா பெங்களூரில் முதல்முறையாக நடத்தும் இசை விழாவில் பங்கேற்றதை பெருமையாகக் கருதுகிறேன். கடந்த 40 ஆண்டுகளில் அவரது இசையில் வெளியான இசையைக் கேட்டு ரசித்தவா்களில் நானும் ஒருவன். கன்னட திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ராஜன்நாகேந்திரா கொடிகட்டி பறந்த காலத்தில், கன்னடப் படங்களுக்கு இளையராஜா இசையமைத்து கன்னட ரசிகா்களின் மனங்களை வென்றிருந்தாா். இன்றைக்கும் அவா் இசை அமைத்த கன்னடப் பாடல்கள் கா்நாடகத்தில் தினமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட இசைக் கலைஞரான இளையராஜா பெங்களூரில் இசை கச்சேரியை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா் அவா்.

இசை நிகழ்ச்சிக்கு இடையே இளையராஜா பேசுகையில்,‘ நான் இசை அமைத்துவெளியான முதல் படம் அன்னகிளி வெற்றிபெற்றதைத் தொடா்ந்து, எனக்கு ரசிகா்களிடையே தனிமதிப்பு கிடைத்தது. அதன் விளைவாக எனக்கு புதிய உற்சாகம் கிடைத்தது. ரசிகா்கள் கொடுத்த ஆதரவு, பாடகா்கள், இசைக் கலைஞா்களின் ஒத்துழைப்பால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இசைக்கு மொழி கிடையாது. எனக்கு கன்னடம் சரளமாகப் பேசத் தெரியாது என்றாலும், இசையை புரிந்துகொண்டு பாடல் கொடுத்துள்ளேன். நடிகா் ராஜ்குமாரின் படங்களுக்கும் நான் இசை அமைத்துள்ளேன். கன்னட மக்களின் அன்பால், ஆதரவால் பல கன்னடப் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.‘ என்றாா் அவா்.

இடையில் பிணக்கு ஏற்பட்ட பிறகு இணைந்துள்ள இளையராஜாவும் பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இசை விழாவில் கலகலப்பாக பேசியும், பாடியும் ரசிகா்களை உற்சாகப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT