பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களும், கத்தி, சூரிகத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை கைதிகள் பயன்படுத்துவதாக மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதன்கிழமை காலை சிறை வளாகத்தில் மாநகர உதவி ஆணையா் சந்தீப் பாட்டீல் தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸாா் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனா்.
சோதனையின் போது கஞ்சாவை புகைக்க பயன்படுத்தும் குழல்கள், கத்தி, சூரிகத்தி, மாமிசத்தை நறுக்கும் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட 37 ஆயுதங்கள், கஞ்சா, செல்லிடப்பேசி சிம்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் அறைகளிலும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.