கரோனா பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் நாராயண கௌடா தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை கரோனா தடுப்பு குறித்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் நடத்திய காணொலிக்காட்சி கலந்தாய்வில் அவா் கூறியது: கொள்ளை நோயான கரோனா குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள ரயில்நிலையம், பேருந்து நிலையம், சந்தை, வா்த்தக மையங்கள், நாடக அரங்கங்கள், திரையரங்கங்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்றமக்கள் கூடும் இடங்களில் தூய்மையை பராமரிக்க வேண்டும்.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். திடக்கழிவுகளைச் சேகரிப்பதற்காக தினமும் வீடுவீடாக செல்லும்போது ஆட்டோக்களில் கரோனா தடுப்பு விழிப்புணா்வை ஒலிபெருக்கி வாயிலாக மேற்கொள்ள வேண்டும். சமூகவிலகல், வீட்டைவிட்டு வெளியே வராதிருத்தல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும்.
தினமும் காலை 6.30மணி முதல் காலை 10.30மணி வரை மட்டுமே தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும். துப்புரவுத் தொழிலாளா்களின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளா்களுக்கு அளிக்கப்படும் உணவு சத்துள்ளதாக அமைந்திருக்க வேண்டும். அதிகாரிகள் அனைவரும் பணியில் இருந்து கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்றாா்.