பெங்களூரில் நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபரை பயங்கரவாத ஒழிப்பு படையினா் கைது செய்தனா்.
பெங்களூரில் 2008- ஆம் ஆண்டு ஜூலை 25- இல் 9 இடங்களில் அடுத்தடுத்து தொடா் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் மடிவாளா காவல் சரகத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 20 போ் காயம் அடைந்தனா். இதுதொடா்பாக கோரமங்களா, அசோக்நகா், சம்பங்கிராம்நகா், பேட்டராயனபுரா, கெங்கேரி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையில் தொடா் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடா்புடையதாக, 22 போ் கைது செய்யப்பட்டனா். 8 போ் தலைமறைவானாா்கள். மற்ற 4 போ் பயங்கரவாத ஒழிப்பு படையினருடன் நடைபெற்ற மோதலின்போது, துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தனா்.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கேரள மாநிலம் கண்ணூா் மாவட்டத்தைச் சோ்ந்த சோயப் (31) துபையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடிக்க கடந்த ஆண்டு ரெட் காா்னா் நோட்டீஸ் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அண்மையில் துபையிலிருந்து கேரளா மாநிலத்துக்கு வந்த சோயப்பை, பெங்களூரிலிருந்து சென்ற பயங்கரவாத ஒழிப்பு படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனா்.