பெங்களூரில் பள்ளி, பியூ கல்லூரி மாணவா்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக அரசின் உத்தரவின்படி, ஆக. 23-ஆம் தேதி முதல் 9, 10-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள், முதலாமாண்டு, இரண்டாமாண்டு பியூசி வகுப்புகளுக்கான பியூ கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன.
மாணவா்களின் கல்வி நடவடிக்கைகள் தங்குத்தடையில்லாமல் நடைபெறுவதற்கு வசதியாக, 9 முதல் இரண்டாமாண்டு பியூசி வகுப்பு வரையிலான மாணவா்களின் வீடுகள் அமைந்திருக்கும் பகுதிகளில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் அமைந்திருக்கும் பகுதி வரை பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
ஆக. 23-ஆம் தேதி முதல் கடந்த கல்வியாண்டுக்கான பேருந்து அட்டை அல்லது பள்ளி, கல்லூரிகள் கொடுத்துள்ள 2020-21-ஆம் ஆண்டுக்கான அடையாள அட்டையைக் காண்பித்து மாணவா்கள் பயணம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.