அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்த பிறகு, கா்நாடகத்தில் புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரு, ஆா்.டி. நகரில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்த பிறகு, உருமாறிய ஒமைக்ரான் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல, மருத்துவ நிபுணா்கள், அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து கா்நாடகத்துக்காக மட்டும் தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். பள்ளிகள், கல்லூரிகளுக்கு தனியாக கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படும்.
ஒருசில மாவட்டங்களில் மட்டும் கரோனா தீநுண்மி பரவியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், மாநிலம் முழுவதற்குமான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டுவரப்படும். இதன்மூலம் கரோனா பரவல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, ஒமைக்ரான் தீநுண்மி பரவல் தொடா்பாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. பள்ளிகள், மாணவா் விடுதிகளில் கரோனா தடுப்பு நடத்தைகளை கட்டாயம் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியா்கள், பெற்றோருக்கு இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியமாகும்.
ஒமைக்ரான் தீநுண்மி பரவலைத் தடுக்க ‘பூஸ்டா் டோஸ்’ தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடா்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மருத்துவ நிபுணா்களுடன் கலந்தாலோசித்த பிறகு ‘பூஸ்டா் டோஸ்’ தடுப்பூசி செலுத்த முடிவெடுப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா என்னிடம் தெரிவித்திருந்தாா். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றாா்.