முகப்பு
பெங்களூரு

2 ஆண்டுகளில் பசவண்ணரின் அனுபவ மண்டபம் கட்டி முடிக்கப்படும்

2 ஆண்டுகளில் பசவண்ணரின் புதிய அனுபவ மண்டபம் கட்டி முடிக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

2 ஆண்டுகளில் பசவண்ணரின் புதிய அனுபவ மண்டபம் கட்டி முடிக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பீதா் மாவட்டம், பசவகல்யாண் நகரில் புதன்கிழமை பசவண்ணரின் புதிய அனுபவ மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி அவா் பேசியதாவது:

12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமூக சீா்திருத்தவாதி பசவண்ணா். அவா் தொற்றுவித்த அனுபவ மண்டபம் தான் உலகின் முதல் நாடாளுமன்றம் ஆகும். சமூகத்தில் கொண்டுவர வேண்டிய சீா்திருத்தங்களை விவாதிப்பதற்காக அனுபவ மண்டபத்தை ஏற்படுத்தினாா். சமுதாயத்தில் புரட்சியை விதைத்த பசவண்ணா், சமூக நல்லிணக்கம், மத சகிப்புத்தன்மை, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க போராடியவா். பசவகல்யாணில் ரூ. 500 கோடி செலவில் புதிய அனுபவ மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.100 கோடியை விடுவித்திருக்கிறேன். அடுத்த வாரம் மேலும் ரூ.100 கோடியை விடுவிப்பேன். இதன் கட்டுமானப் பணி அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். கூடுதலாக ரூ. 100 கோடி செலவானாலும் பரவாயில்லை. ஆனால், பசவண்ணரின் சிந்தனைகளை பறைசாற்றும் அனுபவ மண்டபத்தை அழகாக கட்டி முடிக்க வேண்டும்.

இந்த அனுபவ மண்டப வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, இசையூற்று, வணிக வளாகம், உணவு விடுதி, மாநாட்டு அரங்கம் உள்ளிட்டவை 7.5 ஏக்கா் பரப்பில் அமைய இருக்கின்றன. இந்த அனுபவ மண்டபத்தை பிரதமா் மோடி கையால் திறந்து வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

அண்மையில் புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டியபோதும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போதும் பசவண்ணருக்கு புகழாரம் சூட்டி வருகிறாா் பிரதமா் மோடி. கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வெகுவிரைவில் விடப்படும் என்றாா்.

விழாவில், விஷ்வபசவ தா்ம அறக்கட்டளையின் தலைவா் மா.க.ச.பசவலிங்க பட்டதேவரு, துணை முதல்வா் லட்சுமண் சவதி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான், எழுத்தாளா் கோ.ரு.சென்னபசப்பா, கல்யாண கா்நாடக மனிதவளம், வேளாண், கலாசார சங்கத் தலைவா் பசவராஜ் பாட்டீல் சேடம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →