மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!
மேற்காசிய பதற்றமான சூழல், இந்திய மருத்துவத் துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புது தில்லி : மேற்காசிய பதற்றமான சூழல், தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார என்சிஆர் பகுதியில் மருத்துவத் துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த பிப். 28முதல் தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் படைகளின் எதிர்வினை ஆகியவற்றால் மேற்காசிய பிராந்தியத்தில் பெரும்பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அப்பகுதிகளுக்கான விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக, மேற்காசிய பிராந்தியத்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இங்குள்ள நவீன மருத்துவ சுகாதார கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக தில்லிக்கு வருகின்றனர். இந்திய மருத்துவ சுகாதார சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாகச், சுமார் 30 - 40 சதவீதம் சர்வதேச மருத்துவ பயணிகளுடன் மேற்காசியா முதன்மையாகத் திகழ்கிறது.
இந்நிலையில், அண்மைக் காலமாக இராக், ஓமன், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து சிகிச்சைகளுக்கு வரும் நோயாளிகள் விகிதம் குறைந்துள்ளது. அவ்வகையில் கணக்கிட்டால், கடந்த மாதக் கடைசி 10 நாள்களில் பதிவான சர்வதேச நோயாளிகள் வருகையுடன் இம்மாத முதல் 10 நாள்கள் வருகையை ஒப்பிட்டால், மேற்காசியாவிலிருந்து வரும் நோயாளிகள் விகிதம் 75 சதவீதம் சரிவடைந்துள்ளது என்று இது குறித்த தகவலறிந்த மருத்துவர்கள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தனர்.