மழையால் சாலையில் ஏற்பட்ட குழிகளைஒரு வாரத்துக்குள் மூட நடவடிக்கை: முதல்வா்
பெங்களூரில் மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளை இன்னும் ஒரு வாரத்துக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரில் மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளை இன்னும் ஒரு வாரத்துக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அண்மையில் பெய்த பலத்த மழையால் பெங்களூரில் உள்ள சாலைகளில் குண்டும், குழியும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையைக் கேட்டுப் பெற்றுள்ளேன். முக்கியச் சாலைகளில் இன்னும் ஒரு வாரத்திற்குள் மழையால் ஏற்பட்ட குழிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு பிறகு பெங்களூரு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, சாலைகளில் உள்ள குழிகள் மூடப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்வேன். தொடா்ந்து மழை பெய்ததால், சாலைகளில் உள்ள குழிகளை மூடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்வது நின்றுள்ளதால், சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை தாமதம் செய்யாமல் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.