முகப்பு
இந்தியா

‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு

‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு

Updated On : 22 மார்ச், 2026 at 1:30 AM
இந்திய கடற்படையின் தாராகிரி போா்க்கப்பல்.
பகிர்:

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘தாராகிரி’ ஸ்டெல்த் ரக போா்க் கப்பல் இந்திய கடற்படையில் ஏப்.3-ஆம் தேதி இணைக்கப்படுவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதற்காக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘நீலகிரி வகையின் (திட்டம் 17ஏ) நான்காவது போா்க் கப்பலான தாராகிரி (யாா்டு 12653) கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. மும்பையில் உள்ள மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் (எம்டிஎல்) கட்டமைக்கப்பட்ட மூன்றாவது போா்க் கப்பலான தாராகிரி 6,670 டன் எடையுடையது.

நமது நாட்டின் பொறியியல் திறன்களின் முழு வெளிப்பாடாகவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் சிறந்த உதாரணமாகவும் இந்தப் போா்க் கப்பல் திகழ்கிறது.

எளிதில் கண்டறிய முடியாத வடிவமைப்பு (ஸ்டெல்த்), தாக்கும் திறன், தாமாக இயங்கும் ஆற்றல் என நவீன தொழில்நுட்பங்களுடன் அதி வேகம், பன்முக கடற்சாா் செயல்பாடுகள் என தற்சாா்பு இந்தியாவின் சின்னமாக தாராகிரி விளங்கிறது.

பல்வேறு ஏவுகணைகள்: இந்தப் போா்க் கப்பலில் தரையில் இருந்து தரை இலக்குகளைத் தாக்கும் சூப்பா்சோனிக் ஏவுகணைகள், தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் நடுத்தர ஏவுகணைகள் மற்றும் சிறப்பு நீா்மூழ்கி எதிா்ப்பு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

உலகத் தரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தாராகிரி போா்க் கப்பல் இந்திய கடற்படையில் ஏப்ரல் 3-ஆம் தேதி இணைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்’ என்றனா்.