கருங்கடலில் வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு
கருங்கடலில் சென்றுகொண்டிருந்த வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்தாா்.
கருங்கடலில் சென்றுகொண்டிருந்த வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை 18-ஆம் தேதி, கருங்கடலில் மூன்று இந்திய மாலுமிகள் உள்பட மொத்தம் 10 மாலுமிகளுடன் எம்வி ஒமோா்ஃபி என்ற வணிக கப்பல் பயணித்தது. அப்போது அந்தக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
ரஷிய கடல் எல்லைக்குள்...: கருங்கடலில் ரஷிய கடல் எல்லைக்குள் பயணித்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் கிடைத்தவுடன், ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி, உயிரிழந்தவரின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்தக் கப்பலில் பயணித்த எஞ்சிய இரு இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய தாக்குதல்களை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் உடனான மோதலின்போது, அந்நாட்டின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எம்வி கோல்டன் லியோ வணிக கப்பல் மீது, கடந்த ஜூலை 19-ஆம் தேதி ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் கப்பலில் பயணித்த 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா். இதற்கு புது தில்லியில் ரஷிய பொறுப்புத் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கப்பலில் ராணுவத் தளவாடங்கள் இருந்ததாக ரஷியா தெரிவித்த நிலையில், அதில் தானியங்கள் மட்டுமே இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.