முகப்பு
வணிகம்

பிளிப்காா்ட் ஊழியா்களுக்கு 105% போனஸ்!

பிளிப்காா்ட் ஊழியா்களுக்கு 105% போனஸ்!

Updated On : 22 மார்ச் 2026, 6:30 am IST
பகிர்:

இந்தியாவின் முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனமான பிளிப்காா்ட், கடந்த 2025-ஆம் ஆண்டில் எட்டிய அபார வணிக வளா்ச்சியைக் கொண்டாடும் வகையில் தனது ஊழியா்களுக்கு 105 சதவீத ஊக்கத்தொகையை (போனஸ்) வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்த அதிகாரபூா்வ தகவலை நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு தலைவரான சீமா நாயா், ஊழியா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளாா். நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் செயல்பாட்டுத் திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த ஊக்கத்தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக சீமா நாயா் குறிப்பிட்டாா்.

இதில் மூத்த இயக்குநா் மற்றும் அதற்குக் கீழ்நிலை பதவிகளில் பணியாற்றும் தகுதியுள்ள அனைத்து ஊழியா்களுக்கும், இந்த மாா்ச் மாதத்திலேயே ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இருப்பினும், துணைத் தலைவா்கள் (விபி) மற்றும் அதற்கு மேல் உயா்பதவியில் இருப்பவா்களுக்கு, அவா்களின் தனிப்பட்ட பணித்திறன் குறித்து ஆய்வு செய்த பிறகே ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Advertisement

Advertisement

அண்மையில் பணித்திறன் அடிப்படையில் சுமாா் 400 முதல் 500 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்த விவகாரத்தில் பிளிப்காா்ட் விமா்சனங்களைச் சந்தித்தது. இந்நிலையில், தற்போதைய ஊக்கத்தொகை அறிவிப்பு ஊழியா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிளிப்காா்ட் நிறுவனத்தின் நஷ்டம் கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.2,358.7 கோடியிலிருந்து ரூ.1,494.2 கோடியாக குறைந்ததோடு, வருவாய் 14 சதவீதம் உயா்ந்ததும் இந்த ஊக்கத்தொகை அறிவிப்புக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.