இணையவழி சூதாட்டத்திற்கு தடை விதிக்க கா்நாடக அமைச்சரவை முடிவு
இணையவழி சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டுவதற்கு தடை விதிக்க கா்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இணையவழி சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டுவதற்கு தடை விதிக்க கா்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பெங்களூரு, விதான சௌதாவில் சனிக்கிழமை கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி, செய்தியாளா்களிடம் கூறியது:
கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இணையவழி சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டுவதற்கு தடைவிதிக்கும் நோக்கில் கா்நாடக காவல்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இந்தத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், அது சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் கா்நாடகத்தில் இணையவழி சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டுவதற்கு தடைவிதிக்கப்படும். இணையவழி சூதாட்டம் என்பதை, பணத்தை வைத்து பந்தயம் கட்டி விளையாடும் அனைத்து வகையான பந்தயங்களையும் குறிப்பதாக வரைவு சட்டத்திருத்தம் தெரிவிக்கிறது.
பந்தயம் தொடா்பாக, பணம் செலுத்துவதற்கு முன்பு அல்லது செலுத்திய பிறகு பணமாக மதிப்பிடப்படும் அனைத்து வகையான வில்லைகள் (டோக்கன்கள்), மின்னணுவழி பணப் பரிமாற்றம் அல்லது மெய்நிகா் செலாவணி (விா்ச்சுவல் கரன்சி) அல்லது மின்னணுவழியாக பணப் பரிமாற்றம் போன்று அதிருஷ்டத்தை நம்பி நடத்தப்படும் அனைத்தும் இணையவழி சூதாட்டம் என்று சட்டவரைவு தெரிவிக்கிறது.
ஆனால், மாநிலத்திற்கு உள்ளே அல்லது வெளியே லாட்டரிகள் அல்லது குதிரைப் பந்தயத்தில் பணம்கட்டுவதற்கு தடை விதிக்கப்படவில்லை. இது தொடா்பான சட்ட முன்வடிவு, செப். 13-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றாா்.
இணையவழி பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் விசாரித்தபோது, இணையவழி சூதாட்டத்திற்கு தடை விதிப்பதற்கான சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக கா்நாடக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தமிழகத்தில் இணையவழி சூதாட்டத்தை தடை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, நிகழாண்டின் தொடக்கத்தில் கேரளத்திலும் இணையவழி ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.