விருந்தே புதுமை
'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியம் கூறும். உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோருக்கு உணவிடுவது விருந்து அல்ல; பசித்திருப்போர்க்கு, உணவு கிடைக்காமல் பசியால் வருந்துபவர்களுக்கு, நாம் அறியாத புதியவர்களுக்கு உணவிடுவதே விருந்து.
'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியம் கூறும். உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோருக்கு உணவிடுவது விருந்து அல்ல; பசித்திருப்போர்க்கு, உணவு கிடைக்காமல் பசியால் வருந்துபவர்களுக்கு, நாம் அறியாத புதியவர்களுக்கு உணவிடுவதே விருந்து.
முற்காலத்தில் வெளியூர்களுக்கு நடந்து வழிநடைச் செல்வோரும், ஊர்திகளில் செல்வோரும் தங்கிச் சாப்பிடச் சத்திரங்கள் இருந்தன. அவையல்லாமல் வீடுகளிலும் அழைத்து உணவிட்டார்கள். இதற்காகவே திண்ணையும், படுப்பதற்கு திண்டுகளும் முன்புறம் கட்டி வைத்திருந்தார்கள்.
பயணிகள் குறிப்பாக, துறவிகள் சென்றால் அழைத்து உணவிடுவதை பெரும் கடமையாகவும் புண்ணியமாகவும் கருதினர்.
இதையே விருந்தோம்பல் என்று சங்க இலக்கியங்கள் கூறின.
விருந்தினர் வீட்டு வாசலில் இருக்க தாம் மட்டும் கதவடைத்து உள்ளே அமிழ்தமாக இருந்தாலும் உண்ண மாட்டார்கள் என்று திருக்குறள் கூறும்.
வீட்டுக்குள் உணவே இல்லை என்கிற ஏழைமை என்றால், அதுவே மிகக் கொடுமையான வறுமை என்று கருதினர்.
இளையான்குடியில் பிறந்த மாறனார், துறவிகளுக்கு உணவிடும் வழக்கம் கொண்டவர். மழை பெய்யும் இரவில் துறவி ஒருவர் மாறனாரின் வீட்டுக் கதவைத் தட்டி அழைத்தார். மாறனார் கதவைத் திறந்து, அடியாரை வீட்டுக்குள் அழைத்து வரவேற்று, அமரச் செய்தார்.
அடியார்க்கு உணவளிக்க வீட்டில் ஏதுமில்லையே எனக் கணவனும் மனைவியும் வருத்தப்பட்டனர். அன்றைய மழை நாளின் பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெல் மணிகளைச் சேகரித்து வந்தார் மாறனார்.
வீட்டுக்குப் பின்னால் இருந்த கீரைகளைப் பறித்து அலசி ஆய்ந்தார் அவரது மனைவி. அடுப்பெரிக்க விறகில்லை. மாறனார் தன் வீட்டின் சிதலமடைந்த கூரையில் சிறிது உருவியும் உத்தர மரக்கட்டைகளை உடைத்து எடுத்தும் கொடுத்தார். அவற்றைப் பயன்படுத்தி அவரது மனைவி உணவு சமைத்தார். மாறனாரும் அவரது துணைவியாரும், சிவனடியாருக்கு உணவு படைத்தனர்.
சிவபெருமானே அடியவராக வந்தவர் என்றும், சிவபெருமான் உமாதேவியுடன் ஒளியோடு தோன்ற, நாயனாரும் துணைவியாரும் வணங்கிட, இறைவன் அருள் செய்தார்... என்றும் பெரிய புராணம் கூறும்.