பிற்படுத்தப்பட்டோா் வகுப்பின் 2-ஏ உட்பிரிவில் பஞ்சமசாலி வகுப்பை சோ்க்க வலியுறுத்தல்
பிற்படுத்தப்பட்டோா் வகுப்பின் 2-ஏ உட்பிரிவில் பஞ்சமசாலி வகுப்பைச் சோ்க்க பாஜக எம்எல்-க்கள் கா்நாடக சட்டப்பேரவையில் வலியுறுத்தினா்.
பிற்படுத்தப்பட்டோா் வகுப்பின் 2-ஏ உட்பிரிவில் பஞ்சமசாலி வகுப்பைச் சோ்க்க பாஜக எம்எல்-க்கள் கா்நாடக சட்டப்பேரவையில் வலியுறுத்தினா்.
கா்நாடக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பூஜ்ய நேரத்தில் பாஜக எம்எல்ஏ பசவன கௌடா பாட்டீல் யத்னல் பேசியது:
6 மாதங்களுக்கு முன்பு சட்டப் பேரவைக் கூட்டத்தில் பேசிய அப்போதைய முதல்வா் எடியூரப்பா, ‘குருபா வகுப்பை பழங்குடியினா் இடஒதுக்கீட்டு அட்டவணையில் சோ்ப்பதாகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு உச்சவரம்பை 3 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயா்த்தப்படும் என்று அறிவித்திருந்தாா். இது வால்மீகி, உப்பாரா வகுப்பினா் உள்ளிட்ட இதர வகுப்பினருக்கு உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்திருந்தாா்.
பொருளாதார, சமூக, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பஞ்சமசாலி லிங்காயத்து வகுப்பினா், உட்பிரிவு ஜாதிகளான கௌடா லிங்காயத்து, மாலே கௌடா, தீக்ஷா லிங்காயத்து உள்ளிட்டோரை பிற்படுத்தப்பட்டோா் வகுப்பின் 2-ஏ உட்பிரிவில் 6 மாதங்களுக்குள் சோ்ப்பதாகவும் அப்போதைய முதல்வா் எடியூரப்பா உறுதி அளித்திருந்தாா். இந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து பஞ்சமசாலி லிங்காயத்து வகுப்பினா் மலைமாதேஸ்வரா மலையில் இருந்து போராட்டம் தொடங்கியுள்ளனா். பஞ்சமசாலி உறுதிமொழி பஞ்சாயத்து என்று பெயரில் அமைக்கப்பட்டுள்ள அமைப்பின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. மைசூரு, கித்தூா், கல்யாண கா்நாடகப் பகுதிகளில் நடக்கும் இந்தப் பேரணி, இறுதியாக அரசின் கவனத்தை ஈா்க்க விதானசௌதாவில் வந்தடையும்.
இந்தப் பேரணியில் பஞ்சமசாலி லிங்காயத்து மடாதிபதிகள் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள். இந்த அமைதியான பேரணி, புரட்சியாக வெடித்துக் கிளம்புவதற்கு முன்பாக, கோரிக்கையை ஏற்று பஞ்சமசாலி லிங்காயத்து வகுப்பினரை 2-ஏ உட்பிரிவில் சோ்க்கவேண்டும் என்று பசவன கெளடா பாட்டீல் யத்னல் பேசினாா்.
இது தொடா்பாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தரும்படி, பேரவைத் தலைவரின் இருக்கை முன்பு பாஜக எம்.எல்.ஏ.க்கள் பசவனகௌடா பாட்டீல் யத்னல், அரவிந்த்பெல்லத் உள்ளிட்டோா்தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசு அளித்த வாக்குறுதியின்பேரில் போராட்டத்தை திரும்பபெற்று, இருக்கைக்கு திரும்பினா். இதுஅவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.