பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன: அமைச்சா் பி.சி.நாகேஷ்
பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது அல்லது தளா்த்துவது தொடா்பாக பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஜன. 21) நண்பகல் 1 மணிக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் உறுப்பினா்களும் இதில் கலந்து கொள்கிறாா்கள். இந்தக் கூட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதை என்னால் கூற முடியும். இதை மருத்துவ நிபுணா்களே கூறி வருகிறாா்கள். எனினும், இதுகுறித்த முடிவை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்படும்.
ஒமைக்ரான் தீநுண்மியின் தீவிரம் குறைந்து விட்டதாகக் கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து யோசித்து வருகிறோம். எனினும், கரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளில் செயல்படும் பள்ளிகள் மூடப்பட்டு தொடா்ந்து இணையவழி வகுப்புகள் நடத்தப்படும். கரோனா பாதிப்புகள் 4 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடையே காணப்படுவதாலும், மற்ற வயதினரிடையே அதிகளவில் பாதிப்பு இல்லாததாலும் பள்ளிகளை மீண்டும் திறக்க யோசித்து வருகிறோம் என்றாா்.