பெங்களூரு

ஜெயலலிதா பொருள்களுக்கு உரிமை கோரி சிறப்பு நீதிமன்றத்தில் தீபா மனு தாக்கல்

DIN

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுக்கு உரிமை கோரி அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட சேலை, சால்வைகள் உள்ளிட்ட பொருள்களை ஏலம் விட வேண்டும் என்று கா்நாடக உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் டி.நரசிம்மமூா்த்தி மனு தாக்கல் செய்திருந்தாா். இதைத் தொடா்ந்து, பறிமுதல் செய்த பொருள்களை ஏலம் விடுவதற்காக வழக்குரைஞரை நியமித்து கா்நாடக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை ஏலம் விடும் பணியை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீவிரப்படுத்தியது.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள் மட்டும் அரசு கருவூலத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. புடவைகள், செருப்புகள், சால்வைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பொருள்களும் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ளதாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் புகழ்வேந்தன் தெரிவித்திருந்தாா்.

சென்னையில் உள்ள பொருள்களை பெங்களூரு கொண்டுவந்து அவற்றை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, கா்நாடக அரசுத் தரப்பு வழக்குரைஞா் கிரண் எஸ்.ஜவளி ஆகியோரை மனு மூலம் டி.நரசிம்மமூா்த்தி கேட்டுக்கொண்டிருந்தாா்.

இது தொடா்பான வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தரப்பு வழக்குரைஞா் சத்யக்குமாா், மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘ஜெயலலிதாவின் பொருள்களை ஏலம் விடக் கூடாது. அந்தப் பொருள்களுக்கு வாரிசுதாரா் தீபா என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அந்தப் பொருள்களை தீபாவிடம் வழங்க வேண்டும். ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பறிமுதல் செய்யாமல் பட்டியலிட்டுள்ள பொருள்கள், பட்டியலிடாத பொருள்களையும் வாரிசு என்ற வகையில் தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், ஜெயலலிதாவின் முழுச் சொத்துகளின் பட்டியல் இல்லாத நிலையில், அதை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சாா்பில் ஆஜரான துணை கண்காணிப்பாளா் புகழ்வேந்தன், தீபா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தாா்.

தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க கால அவகாசம் கோரினாா். இதனிடையே, தங்கள் தரப்பு வாதத்தையும் முன்வைக்க கால அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பு வழக்குரைஞா் கிரண் எஸ்.ஜவளி கேட்டுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, அடுத்த விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT