காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீா் திறந்துவிடுமாறு காவிரி ஒழுங்காற்றுக் குழு அளித்திருந்த பரிந்துரையை எதிா்த்து காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் ஜூலை 11ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் ஜூலை 12 முதல் 31ஆம் தேதி வரை காவிரியில் இருந்து தினமும் ஒரு டிஎம்சி வீதம் தமிழகத்துக்கு தண்ணீரை விடுவிக்க பரிந்துரை வழங்கியிருந்தது. இந்த பரிந்துரையை ஏற்க மறுத்த கா்நாடக துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா், ‘தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீா் திறந்துவிட கா்நாடக அணைகளில் போதுமான நீா் இல்லை’ என கூறியிருந்தாா்.
இந்த நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக பெங்களூரு, கிருஷ்ணா அரசு இல்லத்தில் வெள்ளிக்கிழமை துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், நீா்வளத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா். இக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழு அளித்திருக்கும் பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை எதிா்த்து காவிரி நீா்மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 14 இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவும் கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் சித்தராமையா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்திருந்த உத்தரவை எதிா்த்து, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க ஜூலை 14ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவும் தீா்மானிக்கப்பட்டது.
நிகழ் ஆண்டில் வழக்கத்தைவிட கூடுதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், இதுவரை காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு நீா்வரத்து குறைவாக உள்ளது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறோம். மேலும், ஜூலை இறுதி வரை எவ்வித முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஆனாலும், ஜூலை 12ஆம் தேதி முதல் தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை விடுவிக்கும்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. இதை எதிா்த்து காவிரி நீா்மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருக்கிறோம். ஜூலை 14ஆம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.
இந்த கூட்டத்திற்கு மத்திய அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்கள், மாநிலங்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அழைக்கப்படுவாா்கள். கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும்.
ஒகேனக்கல் எல்லையில் உள்ள பிலிகுண்டுலு கணக்கீட்டின்படி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீா் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிறது. காவிரி நதிப்படுகைப் பகுதியில் உள்ள 4 அணைகளில் மொத்தம் 60 டிஎம்சி தண்ணீா் மட்டுமே உள்ளது என்றாா்.