முகப்பு
சென்னை

அமைக்கப்படுமா அவசர சிகிச்சைப் பிரிவு?

பொன்னேரி, பிப். 7: பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லாததால் அப்பகுதியில் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:07 PM
பகிர்:

பொன்னேரி, பிப். 7: பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லாததால் அப்பகுதியில் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூர், சோழவரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அத்துடன் பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி ஆகிய மூன்று பேரூராட்சிகள் அமைந்துள்ளன. பொன்னேரி தாலுகாவில் நகரம், கிராமம் என 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

 அத்துடன் பொன்னேரியில் 10 கி.மீ தூரத்தில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பொன்னேரி ரயில் நிலைய சாலையில் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. 1964-ம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதல்வர் பக்தவச்சலத்தால் திறந்து வைக்கப்பட்ட இம்மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.

 அத்துடன் உள்நோயாளிகளாக 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மகப்பேறு பிரிவில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லாததால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, கும்மிடிபூண்டி-சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் மார்க்கம் உள்ளிட்ட பகுதிகளில் விபத்தில் காயமடைபவர்களுக்கு இங்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு, 40 கி.மீ. தூரமுள்ள சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வழியிலேயே உயிரிழக்கும் சம்பவமும் நடக்கிறது.

 டாக்டர்கள் பற்றாக்குறை: அதே போன்று இம்மருத்துவமனையில் குறைந்த எண்ணிக்கையில் டாக்டர்கள் பணிபுரிவதால், விபத்தில் காயமடைந்து 2-க்கும் மேற்பட்டோர் வந்தால் கூட முடிவதில்லை. மேலும் மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சைப் பெறும் கட்டடத்தின் பின்புறம் செடிகள் மண்டிக் கிடக்கிறது.

 எனவே பொன்னேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நலன் கருதி இங்கு அவசர சிகிச்சை பிரிவு தொடங்கவும், போதிய டாக்டர்களை பணியில் நியமிக்கவும், மருத்துவமனையை சுற்றி மண்டிக் கிடக்கும் செடி, கொடிகளை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →