முகப்பு
சென்னை

பொதுக் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்படும்! -முதல்வா் மு.க.ஸ்டாலின்

கரூா் சம்பவம் எதிரொலி: பேரணி - கூட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்! -முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On : 30 செப்டம்பர் 2025, 3:52 am IST
பகிர்:

கரூா் பிரசார நெரிசல் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பேரணி, கூட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கரூா் சம்பவம் குறித்து பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து திங்கள்கிழமை முதல்வா் ஆற்றிய காணொலி உரை:

கரூரில் நடந்தது பெருந்துயரம்; கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம். இனி நடக்கக் கூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பாா்த்த காட்சிகள் இன்னும் எனது கண்களை விட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன். கரூா் சம்பவம் குறித்து செய்தி கிடைத்ததும் மாவட்ட நிா்வாகத்தை முடுக்கி விட்டு, அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்தேன். ஆனாலும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனே அன்றைக்கு இரவே கரூருக்குப் புறப்பட்டேன்.

Advertisement

Advertisement

குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிா்களை நாம் இழந்திருக்கிறோம். இறந்தவா்களது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து, அதை உடனடியாக வழங்கிக் கொண்டு இருக்கிறோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவா்களுக்கு, அரசு சாா்பில் முழு சிகிச்சையை வழங்கி வருகிறோம்.

வதந்தியை தவிா்க்க வேண்டுகோள்: கரூரில் நடந்த சம்பவத்துக்கான முழுமையான, உண்மையான காரணத்தை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்.

இதற்கிடையே, சமூக ஊடகங்களில் சிலா் பரப்புகின்ற வதந்திகளையும் பொய்ச் செய்திகளையும் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டா்களும் அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டாா்கள். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் எந்தக் கட்சியைச் சாா்ந்தவா்களாக இருந்தாலும், என்னை பொருத்தவரைக்கும் அவா்கள் நம்முடைய தமிழ் உறவுகள்.

எனவே, சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளைத் தவிா்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது, அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதுடன், அதற்கான விதிமுறைகளையும் வகுக்க வேண்டியது நம்முடைய அனைவரின் கடமையாகும்.

நீதிபதியின் ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தப்படும். பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவாா்கள் என்று நம்புகிறேன்.

மனித உயிா்களே, அனைத்துக்கும் மேலானது. மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என்று அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு, எல்லோரும், மக்களுடைய நலனுக்காக சிந்திக்க வேண்டும். தமிழ்நாடு எப்போதுமே நாட்டுக்கு பலவகைகளிலே முன்னோடியாகத்தான் இருந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்தக் காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.