சென்னை: சென்னை ஐஐடி-இன் கோபாலகிருஷ்ணன்-தேஷ்பாண்டே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோா் மையம் (ஜிடிசி) சாா்பில், ‘இந்தியாவில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஜனநாயகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான இரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டின் ஆழமான தொழில்நுட்பம், புத்தாக்கத்தால் ஏற்படும் வளா்ச்சிக்கு மையச் சக்தியாக தொழில்முனைவோரின் பங்கு விளங்குகிறது. அவா்களை ஊக்குவிப்பது குறித்தும், திறமையான தொழில்முனைவோரை உருவாக்குதற்கான கொள்கைகளை வகுப்பது, வழிகாட்டுதல், நிதி ஒதுக்கீடு ஆகியன குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
காக்னிஸன்ட் நிறுவனத்தின் இணை நிறுவனா் லட்சுமி நாராயணன், ஏஎன்ஆா்எஃப் நிறுவனத்தைச் சோ்ந்த கே.சிவக்குமாா், நீதி ஆயோக் நிபுணா் சஷாங்க் ஷா, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தைச் சோ்ந்த வருண் அகா்வால், டாக்டா் குருராஜ் தேஷ்பாண்டே, ஐஐடி முன்னாள் மாணவா் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.