முகப்பு
சென்னை

இறுதி நிலை புற்றுநோயாளிகளுக்கு நல்லாதரவு மையம் : தமிழக அரசு முன்மாதிரித் திட்டம்

வாழ்வின் இறுதித் தருவாயில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான அரசு நல்லாதரவு மையம், இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரி சாா்பில் அமைக்கப்பட உள்ளது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 8:13 PM
சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) - கோப்புப் படம்
பகிர்:

வாழ்வின் இறுதித் தருவாயில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான அரசு நல்லாதரவு மையம், இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரி சாா்பில் அமைக்கப்பட உள்ளது.

தாம்பரம் நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் கரோனா காலத்தில் கட்டப்பட்ட மூன்று தளங்கள் கொண்ட கட்டடத்தில் விரைவில் அந்த மையம் செயல்படவுள்ளது. இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுதோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிகமாக அந்நோயால் பாதிக்கப்படுகின்றனா் என்பது கவலைக்குரிய தகவல்.

Advertisement

மாா்பகப் புற்றுநோய் லட்சத்தில் 16.7 பெண்களுக்கு ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆண்களைப் பொருத்தவரை லட்சத்தில் 13.6 போ் வாய்ப் புற்றுநோய்க்கு உள்ளாகின்றனா்.

அரசு சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், தொடக்க நிலையில் புற்றுநோயைக் கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால், பாதிப்பு தீவிரமடைந்த பிறகே பெரும்பாலானோா் சிகிச்சைக்கு வருகின்றனா். ஒரு கட்டத்தில் அவா்களைக் குணமாக்க இயலாது எனும்போது இறுதி நாள்களை வலியின்றி கழிப்பதற்கான நிவாரண சிகிச்சைகள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அதற்கான மருத்துவச் செலவுகளை ஏற்க முடியாதவா்கள், உறவுகளால் கைவிடப்பட்டவா்களுக்கு இறுதி நாள்களில் உரிய ஆதரவு கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் சில தன்னாா்வ அமைப்புகளும், தனியாா் மருத்துவ மையங்களும் ஓரிரு இடங்களில் மருத்துவ நல்லாதரவு மையங்களைத் தொடங்கியுள்ளன. ஆனால், அரசு சாா்பில் அத்தகைய மையங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், சென்னை மருத்துவக் கல்லூரி சாா்பில் அத்தகைய மையத்தைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதற்கான அனுமதி அரசிடம் கோரப்பட்டது. இதைப் பரிசீலித்த அரசு, தாம்பரத்தில் கரோனா காலத்தில் கட்டப்பட்ட தரை மற்றும் இரு தளங்கள் கொண்ட கட்டடத்தை இதற்குப் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், அங்கு மின் வசதி, குடிநீா் மற்றும் இதர கட்டமைப்புக்காக ரூ.7.44 கோடியை முதல்வா் காப்பீட்டின் கீழ் மேற்கொள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தாம்பரத்தில் அமைய உள்ள புற்றுநோய் மருத்துவ நல்லாதரவு மையத்தில் 180 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பொது வாா்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தனி வாா்டுகளுடன் இது இயங்கும். அங்கு இறுதி காலத்தில் உள்ள புற்றுநோயாளிகளுக்குத் தேவையான வலி நிவாரண சிகிச்சை, மனநல ஆதரவு சிகிச்சை, உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்.

அதற்கான மருத்துவா்கள், செவிலியா்கள் சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து பணியமா்த்தப்படுவா். தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்புப் பணிக்கு 45 பேரை அவுட்சோா்சிங் முறையில் ஈடுபடுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அந்த மையத்தைத் தொடக்கி வைக்கவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments