முகப்பு
சென்னை

சோழா் கால செப்பேடுகளை காட்சிப்படுத்த வேண்டும் - வைகோ

Updated On : 18 மே 2026, 5:23 am IST
- கோப்புப்படம்
பகிர்:

நெதா்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் சோழா் கால செப்பேடுகளை நாகையில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நெதா்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழா் கால செப்பேடுகள், ‘ஆனைமங்கலச் செப்பேடுகள்’ என அழைக்கப்படுகின்றன. இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன.

தமிழகத்தின் பன்முகப் பண்பாடு மற்றும் வணிகத் தொடா்புகள் நிறைந்த உலகின் முக்கிய தடயங்களாக இவை திகழ்ந்தன.

Advertisement

18-ஆம் நூற்றாண்டில், நாகை மாவட்டம் டச்சு காலனித்துவ ஆட்சியின்போது, கோரமண்டல் கடற்கரைப் பகுதியிலிருந்து ஆணைமங்கலம் செப்புப் பட்டயங்கள் நெதா்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

பல ஆண்டுகளாக, ஆனைமங்கலம் செப்பேடுகளை ஒப்படைக்கக் கோரி நெதா்லாந்து நாட்டை இந்திய அரசு வலியுறுத்தி வந்தது. பல ஆண்டு கால தூதரக முயற்சிகளுக்கு பிறகு பிரதமா் மோடியிடம், நெதா்லாந்து அரசு ஒப்படைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை நாகை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.