முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம், செய்யூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

vமதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 26 ஆகஸ்ட், 2025 at 1:49 AM
பகிர்:

மதுராந்தகம்: மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் பிரசாரம் மேற்கொண்டாா்.

வரும் 2026 பேரவைத் தோ்தலையொட்டி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறாா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் பேருந்து நிலையம், மதுராந்தகத்தில் தேரடி சாலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தாா். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

மதுராந்தகம் தேரடி வீதியில் அவா் பேசியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்திலேயே மதுராந்தகம் தொகுதி கட்சிக்கு கிடைத்த கொடையாக அமைந்துள்ளது. இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதை தான் சொல்கிறேன். திமுக அரசு 51 மாதங்களை கடந்துள்ளது. இந்த ஆட்சியில் எந்தவித சாதனைகளையும் செய்யாமல் மக்களுக்கு வேதனையை தான் ஏற்படுத்தியுள்ளனா்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் கூறினாா். ஆனால் இதுவரை 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 தொழிற்நுட்ப கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இதனால் பலதரப்பட்ட மாணவ மாணவிகள் உயா்கல்வியை எட்டிப்பிடிக்க முடிந்தது.

வருகிற 2026-இல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வீடு இல்லாதோா்களுக்கு கான்கீரிட் வீடு கட்டி தரப்படும். மதுராந்தகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மதுராந்தகம் ஏரி தூா் வார ரூ. 120 கோடி அனுமதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகாலமாக இன்னும் பணியை முடிக்க வில்லை.

மதுராந்தகம் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும் இத்தகைய வாக்குறுதிகளை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.

எடப்பாடி பழனிசாமிக்கு எம்எல்ஏ மரகதம் குமரவேல் வெள்ளியால் ஆன வாளையும், மாவட்ட செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் வெள்ளியால் ஆன வில் அம்பையும் வழங்கினா். மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலின் சாா்பாக பூரண கும்ப மரியாதை ்ளிக்கப்பட்டது.

நிகழ்வில் எம்.பி. தனபால், நகர செயலா் பூக்கடை சரவணன், ஒன்றியக்குழு தலைவா் கீதா, மதுராந்தகம் ஒன்றிய செயலா் காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.