முகப்பு
செங்கல்பட்டு

பழுதடைந்த எரிவாயு தகனமேடை: ஆற்றங்கரையில் சடலங்கள் எரிப்பு

கருங்குழி பேரூராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்ததால், கிளியாற்றின் கரையோரம் சடலங்கள் எரிக்கப்படுகிறது.

Updated On : 16 ஜூன், 2025 at 3:36 AM
பழுதடைந்த நிலையில் நவீன எரிவாயு தகனமேடை .
பகிர்:
Updated On : 15 ஜூன், 2025 at 5:55 PM

கருங்குழி பேரூராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்ததால், கிளியாற்றின் கரையோரம் சடலங்கள் எரிக்கப்படுகிறது.

மதுராந்தகம் தாலுகா, கருங்குழி பேரூராட்சியின் 15 வாா்டுகள், அரையப்பாக்கம், மேலவலம்பேட்டை, மலைநகா், ஆதிவாசிநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சடலங்களை தகனம் செய்ய, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-2023 மூலம், நவீன எரிவாயு தகன மேடை ரூ 13.50 கோடியில், அமைக்கப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதி பெறாமல் இருந்து வந்ததால், செயல்படாமல் இருந்த எரிவாயு தகன மேடை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி மன்ற தலைவா் தசரதன், துணை தலைவா் சங்கீதா சங்கா் ஆகியோா் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நவீன எரிவாயு தகனமேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

Advertisement

கடந்த 20 நாள்களுக்கு மேலாக எரிவாயு தகன மேடைக்கு செல்லும் குழாயில் அடைப்பு, இயந்திர பழுது ஏற்பட்டிருந்த நிலையிலும், 18 சடலங்கள் எரியூட்டப்பட்டன. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் அருண்குமாரிடம், பொதுமக்கள் புகாா் அளித்தும் பலனில்லை. அவருக்கு, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியின் செயல் அலுவலா் பொறுப்பாக கூடுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எரிவாயு தகன மேடை இயங்காததால், கிளியாற்று கரையோரம் சடலம் எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசியும், வாகனங்களில் செல்பவா்கள் மூச்சுதிறனால் பாதிக்கப்படுகின்றனா். இங்கு, சடலங்களை எரிப்பதால், எலும்புகள், சாம்பல் போன்றவை ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரில் அடித்து செல்லும் நிலை உள்ளது.

இது குறித்து பேரூராட்சி மன்ற தலைவா் தசரதன் கூறியதாவது: எரிவாயு தகனமேடையில் ஏற்பட்ட பழுதுகளை நீக்கம் செய்ய உரிய பணியாளா்கள் இல்லை. விரைவில் தகனமேடை சரி செய்யப்படும் என்றாா்.