முகப்பு
சென்னை

முதியவர்களுக்கு சவாலான புறநகர் ரயில் நிலையங்கள்

சென்னை, செப்.16: மக்கள் நெருக்கமும், போக்குவரத்தும் அதிகம் உள்ள சென்னையில், புறநகர் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பஸ் பயணத்தைவிட, புறநகர் ரயில்களில் பயணம் செய்வதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர

Updated On : 20 செப்டம்பர், 2012 at 11:14 PM
பகிர்:

சென்னை, செப்.16: மக்கள் நெருக்கமும், போக்குவரத்தும் அதிகம் உள்ள சென்னையில், புறநகர் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பஸ் பயணத்தைவிட, புறநகர் ரயில்களில் பயணம் செய்வதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

  ஆனால், முதியவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், பெண்களுக்கும் புறநகர் ரயில் பயணம் பெருத்த சோதனையாக விளங்கிவருகிறது.

  சுற்றி வளைத்து நடைமேடைக்கு இட்டுச் செல்லும் வழிகள், மலை ஏறுவது போன்ற மிகவும் நெட்டான படிக்கட்டுகள் என காட்சியளிக்கும் இந்த ரயில் நிலையங்கள், மூத்த குடிமக்களை மிரள வைக்கின்றன. ரயில் நிலையம் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் குறியீடுகள்கூட இடம்பெறாதது அவலத்தின் உச்சம்.

Advertisement

  குறிப்பாக அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், திருவள்ளூர், திருவாலங்காடு, திருநின்றவூர் ரயில் நிலையங்களில் இந்த நிலைதான் நீடிக்கிறது. உயரமான படிக்கட்டுகளில் ஏற அஞ்சி, உயிரைப் பணயம் வைத்து, ரயில் பாதையைக் கடந்து செல்கின்றனர். வேறு வழி இல்லாததால், அதிகாரிகளும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை.

  சில சமயங்களில் சரக்கு ரயில்கள் இந்த ரயில் நிலையங்களில் பல நாள்கள் நிறுத்தப்படுவதால், ரயில் பாதையைக் கடப்பதும் சவாலாக அமைகிறது. இதனால் சரக்கு ரயில்களுக்கு அடியில் புகுந்து ஆபத்தை விலைக்கு வாங்குகின்றனர்.

  ""ரயில் பாதை வழியாகக் கடந்து வருவதை பயணிகள் வாடிக்கையாகக் கொண்டிருப்பதால், ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது.

  பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் படிக்கட்டுகளுக்குப் பதிலாக, சாய்வு தளம் (ராம்ப்) அமைக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தலாம். இதன் மூலம் எங்களுக்கும் சிக்கல் குறையும்.

  சென்னையில் வடிகால் வசதி போதாது என்பதால், ரயில் நிலையங்களில் சுரங்கப் பாதை அமைப்பது பயன்தராது.

  சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்கு ரயில்களும், சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்லும் சரக்கு ரயில்களும் இடம் கிடைக்காததால் இங்கு நிறுத்தப்படுகின்றன. இதைத் தவிர்க்க முடியாது என உயர் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்'' என்றார் திருநின்றவூர் ரயில் நிலைய அதிகாரிகளில் ஒருவர்.

  இதுகுறித்து தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் குல சிரேஷ்டா கூறியதாவது:

  இந்தியாவில் உள்ள 375 ரயில் நிலையங்கள், மாதிரி ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்படும் என ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

  இதன் அடிப்படையில் சென்னையில் கடற்கரை, பூங்கா நகர், சேத்துப்பட்டு, பரங்கிமலை, தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய ஆறு மின்சார ரயில் நிலையங்களும் திருநின்றவூர், திருவாலங்காடு, செஞ்சி பனப்பாக்கம், மணவூர், திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ஆகிய புறநகர் ரயில் நிலையங்களும், கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் உள்பட 14 ரயில் நிலையங்களும் மாதிரி ரயில் நிலையமாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இதற்காக ரூ. 12.6 கோடி மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்க குறைந்தது ஓராண்டாவது ஆகும். எனவே ஒன்றரை ஆண்டுகளில் இதற்கான திட்டப் பணிகள் தொடங்கிவிடும்.

  கால்கள் வழுக்காத வகையிலான தரை ஓடுகள் பதிப்பது, கழிவறைகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்துவது, முகப்பு வாயில்கள் அமைப்பது, பயணிகள் காத்திருக்க அறை கட்டுவது, அதிக அளவில் நவீன இருக்கைகளைப் போடுவது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த 14 ரயில் நிலையங்களிலும் மேற்கொள்ளப்படும் என்றார் குல சிரேஷ்டா.

  பயணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சாய்வு தளம் (ராம்ப்) அமைத்துத் தரப்படும். சாய்வு தளம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை நாமே முடிவு செய்து அமைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.