கிராமங்களுக்குச் செல்லும் வேளாண் அலுவலர்களை இணையம் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம்
வேளாண் பணிகள், விவசாயம் சார்ந்த பிரச்னைகளைக் கண்டறிய கிராமங்களுக்கு நேரில் செல்லும் வேளாண் அலுவலர்களை இணையம் வாயிலாகக் கண்காணிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. களத்துக்கு வேளாண் அலுவலர்கள் சென்றுள்ளார்களா இல்லையா என்பதை தலைமையகத்தில் இருந்தே இதன்மூலம் கண்காணிக்கலாம்.
வேளாண் பணிகள், விவசாயம் சார்ந்த பிரச்னைகளைக் கண்டறிய கிராமங்களுக்கு நேரில் செல்லும் வேளாண் அலுவலர்களை இணையம் வாயிலாகக் கண்காணிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. களத்துக்கு வேளாண் அலுவலர்கள் சென்றுள்ளார்களா இல்லையா என்பதை தலைமையகத்தில் இருந்தே இதன்மூலம் கண்காணிக்கலாம்.
வேளாண்மைத் துறையில் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, துறையிலுள்ள ஒவ்வொரு உதவி வேளாண்மை அலுவலருக்கும் எட்டு கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் திங்கள் முதல் வியாழன் வரையுள்ள எட்டு நாள்களில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் செல்வார்கள்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் உதவி வேளாண் அலுவலர்கள், களத்தில் வேளாண்மை குறித்த ஆய்வுகளை மேற்கொள்வார்கள். குறிப்பாக, பயிர்களைத் தாக்கியுள்ள நோய்களுக்கு தீர்வு, உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு உதவி வேளாண் அலுவலர்கள் வழங்குவார்கள்.
ஏதேனும் விநோத நோய்கள் தாக்கியிருந்தால் அவர்களிடமுள்ள கையடக்கக் கணினி மூலம் புகைப்படம் எடுத்து அதனை வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி அறிஞர்களின் கருத்துகளைக் கோருவார்கள். இதன்மூலம், பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கும்.
தொடர்பு மையத்தில் பதிவு: உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்லும் எட்டு கிராமங்களிலும் உள்ள அலுவலகங்களில் தொடர்பு மையம் ஒன்றை ஏற்படுத்தி பயண விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தொடர்பு மையத்தில் தங்களது வருகையைப் பதிவு செய்து வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயிகளிடையே வேளாண்மை தொடர்பான பணியை மேற்கொள்ள வேண்டும். அதன்பின், மீண்டும் தொடர்பு மையத்துக்கு வந்து தொழில்நுட்பம் சார்ந்த கலந்துரையாடல்களை உதவி வேளாண் அலுவலர்கள் மேற்கொள்வர்.
இணையத்தில் கண்காணிப்பு: கிராமங்களுக்கு வேளாண் அலுவலர்கள் செல்கிறார்களா என்பது வருகைப் பதிவின் மூலம் ஒருபுறம் கண்காணிக்கப்பட்டாலும், அவர்களை இணையம் மூலமாகவும் தலைமை அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேளாண் அலுவலர்கள் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் கையடக்கக் கணினியானது, ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் கொண்டதாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை இணையதளம் மூலம் இதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மாவட்ட வாரியாக ஒவ்வொரு வேளாண் அலுவலரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்றுள்ளார்களா என்பதை இணையம் மூலமாகவே கண்காணிக்கலாம். இதன்மூலம், அலுவலர்கள் கிராமங்களைத் தேடிச் செல்லும் திட்டம் உறுதிப்படுத்தப்படும் என்று வேளாண்மைத் துறை அலுவலர்கள்
தெரிவித்தனர்.