253-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்!
மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 253-ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல் குறித்து...
மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 253-ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார் .
மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் டாக்டர் கே. பத்மராஜன் (65) உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவு சங்கதேர்தல், சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் இவரை தேர்தல் மன்னன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார்.
இவர் 1988 முதல் இதுவரை 252 தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்து 252 தோல்வி அடைந்ததால் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளார்.
முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.
253 ஆவது முறையாக, திங்கள்கிழமை காலை மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவுக்கு டெபாசிட் செய்ய பணம் இல்லாததால் அவரது நண்பர் டெபாசிட் பணத்தை செலுத்தினார். தோல்வியும் சாதனை படைக்க வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறிய அவர் என்றாவது ஒருநாள் மக்கள் மனம் வைத்தால் நானும் வெற்றி பெறுவேன் என்றார்.