புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் புண்ணியவதியின் வேட்பு மனு நிராகரிப்பு!
புதிய தமிழகம் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு...
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் புண்ணியவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கிருஷ்ணசாமி உள்ளிட்ட அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று(ஏப். 6) வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக கே.கிருஷ்ணசாமி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Advertisement
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (ஏப். 6) நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத் தகவல்படி, தமிழகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் இன்று (ஏப். 7) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜன், விருதுநகரில் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் புண்ணியவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்மொழிந்தவரின் பெயர்கள், விலாசங்கள் தவறாக இருந்ததாகக் கூறி தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்தார்.