253-ஆவது முறையாக வேட்பு மனு! மனம் தளராத "தேர்தல் மன்னன்"
சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் "தேர்தல் மன்னன்" என அழைக்கப்படும் டாக்டர் கே. பத்மராஜன்.
சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார் "தேர்தல் மன்னன்" என அழைக்கப்படும் டாக்டர் கே. பத்மராஜன்.
மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுகுமாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வெற்றி மட்டுமே சாதனை அல்ல; தோல்வியிலும் சாதனை படைக்கலாம் என்பதற்காகவே தொடர்ந்து தேர்தல்களில் மனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
1988 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் வேட்பு மனு தாக்கல் செய்த நான், கூட்டுறவு சங்கத் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறேன்.
இன்று எனது 253-ஆவது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். கடந்த 2011-இல் மேட்டூர் தொகுதி தேர்தலில் அதிகபட்சமாக 6,273 வாக்குகள் பெற்றேன். அதே ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பி.என்.பட்டி பேரூராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டேன். அந்த தேர்தலில் எனக்கு யாரும் வாக்களிக்கவில்லை.
லிம்கா, கின்னஸ் சாதனைப் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளேன்.
தற்போது வைப்பு தொகை அதிகரிக்கப்பட்டதால், சாதாரண மக்கள் போட்டியிட முடியவில்லை. எனவே, அதை பாதியாகக் குறைக்க வேண்டும். எனது தொழில் நலிவடைந்ததால் தற்போது வைப்பு தொகை செலுத்த பணம் இல்லை. எனது நண்பர் ஒருவர் அதை செலுத்தியுள்ளார். தொகுதி மக்கள் மனது வைத்தால் நானும் ஒரு தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது” என்றார்.