முகப்பு
சென்னை

காரைமேல் பிறக்கவைத்தான்;கண்ணீரில் மிதக்க வைத்தான்...!

ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை, மீனவர்கள் முதல் வி.ஐ.பி., வரை பல தரப்பினரும் இருப்பிடமாக மயிலாப்பூர் இருக்கிறது. உயர் தரப்பு மக்களுக்கான வசதிகள் போதுமான அளவுக்கு இருக்கிறது என்றாலும், அடித்தட்டு மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கியே வருகின்றனர்.

Updated On : 19 ஏப்ரல், 2016 at 4:24 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:33 PM

ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை, மீனவர்கள் முதல் வி.ஐ.பி., வரை பல தரப்பினரும் இருப்பிடமாக மயிலாப்பூர் இருக்கிறது. உயர் தரப்பு மக்களுக்கான வசதிகள் போதுமான அளவுக்கு இருக்கிறது என்றாலும், அடித்தட்டு மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கியே வருகின்றனர்.

குறிப்பாக, நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை உள்ள தமிழ்நாடு குடிசை மாற்ணறு வாரியக் குடியிருப்பு, சுனாமி குடியிருப்புகளைச் சுற்றியுள்ள 30,000-க்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வருகின்றனர். இவற்றில் 40 சதவீதத்துக்கும் மேல் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.

இவர் சாதி, மத, இன, மொழி பேதங்களைக் கடந்து வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். உதாரணமாக சீனிவாசபுரம் துலுக்கானத்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெறும் குங்கும பூஜையில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபட்டு வருகின்றனர்.

Advertisement

மத ரீதியாக ஒற்றுமைகள் இருந்தாலும், அடிப்படையில் தீர்க்கப்படாமல் சில பிரச்னைகள் உள்ளன. இங்கு குடிசை மாற்று வாரிய கட்டங்கள் கட்டப்பட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இவற்றில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாதததுடன், குடிசைப் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பதே அந்தப் பகுதி மக்களின் பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.

இதுகுறித்து, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளிகள் எஸ்.குரு,

முள்ளிக்குப்பம் மீனவர் பஞ்சாயத்து சபை நிர்வாகி அழகேசன், கட்டடத் தொழிலாளி சகாயமேரி உள்ளிட்டோர் கூறியது:-

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் மீன்பிடித்தல், கூலித்தொழில் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது சென்னையில் பட்டினப்பாக்கம் பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செம்மஞ்சேரி போன்ற பகுதிகளுக்குச் செல்ல அரசு அறிவுறுத்தியது. ஆனால் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்தப் பகுதியை விட்டுச் செல்ல மனமின்றி வசிக்கிறோம்.

பாழடைந்த குடியிருப்புகள்: இங்குள்ள முள்ளிமாநகர், நம்பிக்கை நகர், ராஜீவ் காந்தி நகர், சீனிவாசபுரம் போன்ற பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 1,350 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகளில் பல இடங்களில் ஆங்காங்கே பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதைப் புதுப்பித்து தருமாறு தொடர்புடைய அதிகாரிகளிடம் அளித்தும், பெயரளவுக்கு மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாழடைந்த வீடுகள் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடனே வாழ்கிறோம்.

நிறைவேறாத வாக்குறுதிகள்: தேர்தல்களின் போது, வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வருவர். மீன் சந்தையை நவீனப்படுத்துதல், கூடுதல் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும், புதிய வீடுகள் கட்டித்தரப்படும் போன்ற வாக்குறுதிகளை அளிப்பர். ஆனால், ஏமாற்றமே விஞ்சியது.

எனவே, பட்டினப்பாக்கத்தில் உள்ள மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் குடியிருப்புகளின் தரத்தையும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளும் வேட்பாளர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் எங்களது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

-அ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.