தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: ரூ.8.5 கோடி வசூல்
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இயக்கப்பட்ட அரசு சிறப்புப் பேருந்துகளின் மூலம் அரசுக்கு மொத்தம்
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இயக்கப்பட்ட அரசு சிறப்புப் பேருந்துகளின் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.8.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு 28,141 பேர் மட்டுமே, சிறப்புப் பேருந்துகளில் கூடுதலாக பயணித்துள்ளனர்.
தீபாவளியையொட்டி, இந்த ஆண்டு சென்னையிலிருந்து கடந்த 15, 16, 17 ஆகிய தேதிகளில் மொத்தம் 11,645 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், 10, 993 பேருந்துகளே இயக்கப்பட்டன.
கடந்த ஆண்டு 11,225 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 10, 648 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த ஆண்டு சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் மொத்தம் 5 லட்சத்து 52, 624 பேர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். கடந்த ஆண்டு 5 லட்சத்து 24,483 பேர் பயணம் செய்தனர்.
அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 28, 141 பேர்தான் அதிகமாக சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது:
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்தோரின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. அலுவல் நாள்களுக்கு இடையே அதாவது புதன்கிழமை தீபாவளி வந்ததால், அடுத்த 2 நாள்களுக்கு விடுமுறை எடுக்க வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டதே இதற்கு முக்கிய காரணம். இதனால் பெரும்பாலானோர் தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் சென்னையிலேயே தங்கிவிட்டனர். இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வரவில்லை என்றே கூற வேண்டும்.
விபத்தில்லா பேருந்து இயக்கம்: தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளால் விபத்துகள் ஏதும் நிகழவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சுங்கச்சாவடிகளில் சிறப்புப் பேருந்துகளுக்கென தனி வழி அமைக்கப்பட்டு, பேருந்துகள் அங்கே நீண்ட நேரம் காத்திருக்காத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததும் பாராட்டத்தக்கது.
ரூ.8.5 கோடி வருவாய்: தீபாவளியையொட்டி, தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட இந்த சிறப்புப் பேருந்துகளால் முக்கிய நகரங்களில் இருந்து முன்பதிவு செய்து அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்ற பயணிகள் மூலம் ரூ.5 கோடியே 1 லட்சத்து 43,000 அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மேலும், தீபாவளி முடிந்து சென்னை போன்ற நகரங்களுக்கு திரும்ப செய்யப்பட்ட முன்பதிவு மூலம் சுமார் ரூ.3.5 கோடி கிடைத்துள்ளது.