எதிர்நீச்சல் -2 தொடரில் நடிப்பதற்கான காரணங்களைப் பகிர்ந்த நடிகர் அபிஷேக்!
எதிர்நீச்சல் -2 தொடரில் நடிப்பதற்கான காரணங்களை ரசிகர்களுடன் நடிகர் அபிஷேக் பகிர்ந்துள்ளது குறித்து...
எதிர்நீச்சல் -2 தொடரில் நடிப்பதற்கான காரணங்கள் குறித்து ரசிகர்களுடன் நடிகர் அபிஷேக் பகிர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 (எதிர்நீச்சல் தொடர்கிறது) தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரிலும் முதல் பாகத்தில் நடித்த நடிகைகளே முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகை பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதில், நடிகை கனிகா மட்டும் தொடரிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக பொம்மலாட்டம் தொடரின் புகழ், நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு திருமணமாகிச் செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இத்தொடரில், அடுத்தடுத்து பல புதிய பாத்திரங்கள் அறிமுகமாகி வருகின்றன.
அந்தவகையில் ஆலிவர் தேவசகாயம் பாத்திரத்தில் நடிகர் அபிஷேக் அறிமுகமாகி நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், கோலங்கள் தொடருக்குப் பிறகு மீண்டும் எதிர்நீச்சல் -2 தொடரில் நடித்ததற்கான காரணம் குறித்து நடிகர் அபிஷேக் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், ''எதிர்நீச்சல் தொடரை ஒப்புக்கொண்டதற்கு மிக முக்கிய காரணம் இயக்குநர் திருச்செல்வம். மற்றொரு காரணம், சன் தொலைக்காட்சி நிர்வாகம்.
கோலங்கள் தொடருக்குப் பிறகு, உங்கள் தகுதிக்கு ஏற்ப ஒரு விஷயம் இருந்தால் உங்களை கட்டாயம் அழைப்பேன் என இயக்குநர் கூறியிருந்தார்.
எதிர்நீச்சல் தொடரில், கேப்டன் ஆலிவர் தேவசகாயம் பாத்திரம், சிறிய பாத்திரமாக மட்டுமே இருந்தது. ஆனால், பிறகு மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்த பாத்திரம் தொடர்ந்து நீடித்து வருகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.