கொளத்தூரில் பூமிக்கு அடியில் மின்கேபிள்கள்: ஒரு மாதத்தில் பணிகள் தொடங்கும்: அமைச்சர் தங்கமணி உறுதி
சென்னை கொளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் பூமிக்கு அடியில் மின்கேபிள் பதிக்கும் பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சென்னை கொளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் பூமிக்கு அடியில் மின்கேபிள் பதிக்கும் பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கொளத்தூர் தொகுதியில் பூமிக்கு அடியில் மின் கேபிள்கள் அமைக்கும் பணி தொடர்பாக பேரவையில் மூன்று முறை கேள்வி எழுப்பியதாகவும், இனி அதுபற்றி மீண்டும் பேச வாய்ப்பு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு, மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி அளித்த பதில்:-
சாலையில் குழிகளை வெட்டி மின் கேபிள்களை பதிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநகராட்சியும், தொலைத்தொடர்புத் துறையும் அதிகளவு நஷ்ட ஈடு கேட்கிறார்கள். இதனால், சாலையில் குழிகளைத் தோண்டாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் பூமிக்கு அடியில் கேபிள்களை பதிக்கும் திட்டம் கொளத்தூர் தொகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஓரிரு வாரங்களில் இறுதி செய்யப்படும். இதன்பின், ஒரு மாதத்தில் பணிகள் தொடங்கும் என்றார்.