திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் இருந்து திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாசன்.இவரை சட்டவிரோத காவலில் வைத்து சில ஆவணங்களில் கையெழுத்திடும்படி மிரட்டல் விடுத்ததாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது திருப்பூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்குப் பின்னர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புகாரில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கைச் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.