சென்னையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் தகராறைத் தொடர்ந்து நடந்த கொலையில் இளைஞருக்கு ஏழாண்டுகள் சிறைகள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
சென்னை நந்தனத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அருள்தாஸ் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே உள்ள நித்யானந்தம் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். இதற்கு நித்யானந்தம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், அருள்தாஸ் குடும்பத்தினருக்கும், நித்யானந்தம் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நித்யானந்தம், அருள்தாஸை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து நித்யானந்தத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.அனில்குமார் முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தத்துக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.