மருத்துவப்படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் , முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை, நுங்கம்பாக்கம், பொன்னாங்கிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அ.நிசார் அகமது (49). இவர், தனது மகளுக்கு மருத்துவப் பட்டப் படிப்பில் இடம் வாங்குவதற்காக, தனது நண்பர் செல்வக்குமாரை கடந்த 2015ஆம் ஆண்டு அணுகியுள்ளார். அப்போது செல்வக்குமார், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த, தனது நண்பர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வ.மோகன்ராஜ் (62) இடம் வாங்கித் தருவார் என நிசார் அகமதுவிடம் கூறி அறிமுகப்படுத்தியுள்ளார்.
இருவரது பேச்சையும் நம்பிய நிசார் அகமது, மருத்துவப்படிப்புக்கு இடம் வாங்கித் தருவதற்காக ரூ.50 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் சொன்னபடி இடம் வாங்கித்தரவில்லையாம். இதைத்தொடர்ந்து, தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, இருவரும் பணத்தைத்தராமல் நிசார்அகமதை அலைக்கழித்தனர். இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தநிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ்- அதிகாரி மோகன்ராஜை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். கைதான மோகன்ராஜ் ஏற்கெனவே, உதவிப் பேராசிரியர், ஆசிரியர், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, அரசு வேலை வாங்கித்தருவதாக 106 பேரிடம் ரூ.5.5 கோடி மோசடி செய்த வழக்கில் சென்ற ஆண்டில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.