ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் இயற்கைச் சூழலைக் காக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பதிவு
ஆக்கிரமிப்பின் பிடியில் பெரும்பாலான நிலங்கள், தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள் என்ற நிலையிலும் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் பெரும்
ஆக்கிரமிப்பின் பிடியில் பெரும்பாலான நிலங்கள், தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள் என்ற நிலையிலும் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் பெரும் அரணாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விளங்குகிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில், சுமார் 10 ஆயிரத்தும் மேற்பட்ட பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 93 சதுப்பு நிலங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னையின் பள்ளிக்கரணை, விழுப்புரம் மாவட்டம் கழுவெளி, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை ஆகிய பகுதிகளில் 3 சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன.
சதுப்பு நிலம் என்பது கடல், ஆறு, ஏரிகளுடன் தொடர்புடைய பகுதியாகும்.
இந்த நிலப் பகுதியானது பஞ்சு போல செயல்பட்டு உபரி, மழை நீரை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. வறட்சி காலங்களில் தண்ணீரை வெளியேற்றி நிலத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்வதுடன், நிலத்தடி நீர்மட்டம் நிலையாக இருப்பதற்கும் சதுப்பு நிலங்கள் பெரும் உதவி புரிகின்றன.
மேலும், நீர்த் தாவரங்கள், மீன்கள், நுண்ணிய உயிர்கள் கொண்ட பல்லுயிர்ச் சூழலை தன்னகத்தே கொண்டுள்ள சதுப்பு நிலங்கள் பறவைகள் வாழ்வதற்கான சிறந்த இடமாகத் திகழ்கின்றன.
பள்ளிக்கரணை: தொடக்கத்தில் தென் சென்னையின் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மேடவாக்கம் வரை சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்டது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாகவும், குப்பைக் கொட்டும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பாற்றும் வகையில், மீதமுள்ள 649 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை வனத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. தொடர் ஆக்கிரமிப்பு, மழைக் குறைவு போன்ற சூழ்நிலையிலும், வனத் துறை, இயற்கை ஆர்வலர்களின் தீவிரக் கண்காணிப்பு காரணமாக பள்ளிக்கரணைக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இதன்படி, கடந்த 4 மாதங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தி நேச்சர் டிரஸ்ட் அறக்கட்டளையின் நிறுவனர் திருநரணன் கூறியதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வாழ்விடமாகக் கொண்ட 150-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், 54 வலசை வரும் பறவை இனங்களும் இங்கு உள்ளன. குஜராத் மாநிலத்தில் இருந்து வலசை வரும் பூநாரை கடந்த 2008-ல் பதிவு செய்யப்பட்டது, கடந்த 2009-இல் சீழ்க்கை சிரவி வாத்து பதிவு செய்யப்பட்டது. தற்போது 450-க்கும் மேற்பட்ட பூநாரைகளும், 900-துக்கும் மேற்பட்ட சீழ்க்கை சிரவி வாத்துகளும் உள்ளன.
அதுபோல, சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கூழைக்கிடா, வர்ண நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், 4 வகையான வெண்நிற நாரைகள், வெள்ளை நிற அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன.
வறட்சி காரணமாக பெரும்பாக்கம் பகுதியில் உள்ள சதுப்பு நிலம் மட்டும் தற்போது வறண்டுள்ளது. இருப்பினும், தோல் குருவி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி ஆகிய தரையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகளுக்கு இந்தச்சூழல் ஏற்றதாக உள்ளது. பள்ளிக்கரணையின் பல்லுயிர்ச் சூழல் காரணமாக இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
10 ஆயிரம் பறவைகள்: இதுகுறித்து வனத் துறை அலுவலர்கள் கூறுகையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின் வேட்டைத் தடுப்பு காவலர்களைக் கொண்டு பல்வேறு பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சதுப்பு நிலத்தின் பல்லுயிர் சூழல் காரணமாக வறட்சி காலத்திலும் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. இதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில், பல்வேறு வகைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றனர்.