நிகழாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1.9 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு மெட்ரோ ரயில் சேவை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், அவர்கள் அளித்து வரும் ஆதரவுமே காரணம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:பயணிகளின் தரமான போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், மெட்ரோ ரயில் சேவை மட்டுமன்றி மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளை ஷேர் ஆட்டோக்கள் மூலமாகவும், ஷேர் டாக்ஸிகள் மூலமாகவும் குறிப்பிட்ட போக்குவரத்து இணைப்புப் பகுதிக்கு அழைத்துச் செல்லும் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை ஆகிய பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று, எழும்பூர், ஏஜி-டிஎம்எஸ், அண்ணா நகர் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் டாக்ஸி சேவை உள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள், அதன் இணைப்பு சேவைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் 1.9 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் அந்த எண்ணிக்கை 29.65 லட்சமாக இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.