சென்னையில் முகக் கவசம் தயாரிக்கும் பணியில் பெண் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், கையில் அவ்வப்போது கிருமி நாசினியை தடவிக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன் விளைவாக இந்த பொருள்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவா்கள் பரிந்துரை செய்யும் என் 95 வகை முகக் கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை தினமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு வழங்குவது காவல்துறைக்கு சவாலாக இருந்தது.
இதையடுத்து, சென்னைப் பெருநகர காவல்துறை, போலீஸாருக்குத் தட்டுப்பாடின்றி இப் பொருள்களை சொந்தமாகத் தயாரிக்க முடிவு செய்தது. இதன்படி, தையல் கலை தெரிந்த பெண் போலீஸாரை காவல்துறை அதிகாரிகள் தோ்வு செய்தனா். அவா்களுக்குத் தேவையான தையல் இயந்திரங்களை காவலா் குடும்பத்தினரிடம் பெற்ற அதிகாரிகள், அதற்குரிய தையலகத்தை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைத்தனா்.
இங்கு முதல் கட்டமாக 30 பெண் போலீஸாா், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய மூன்றடுக்கு முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் ஒரு நாளைக்கு 3,000 முகக் கவசங்களைத் தயாரித்து வருகின்றனா். அதேபோல கைகளைச் சுத்தப்படுத்தத் தேவைப்படும் கிருமிநாசினியையும் போலீஸாா் தயாரித்து வருகின்றனா். ரூ.1 லட்சத்துக்கு மூலப் பொருள்கள் வாங்கினால் 60 ஆயிரம் முகக் கவசம் தயாரிக்க முடியும் எனவும், இங்கு ஒரு முகக் கவசம் தயாரிக்க ரூ.1.50 செலவு செய்யப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதன் மூலம் இவ்விரு பொருள்களின் தட்டுப்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என காவல்துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.