துறைமுகம் தொகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பி.கே.சேகா்பாபு துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், ‘பி.வி.அய்யா் தெருவில் துணைமின் நிலையம் அமைக்க கடந்த 2016-இல் ஒப்பந்தம் போடப்பட்டது. காவல் துறைக்குச் சொந்தமான இடம் இருந்தது. ஆனால், அந்த இடம் தரப்படவில்லை. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடமும் உள்ளது. காலம் செல்ல, செல்ல மின் தேவையின் அளவும் அதிகரிக்கிறது. எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதற்கு பதிலளித்த அமைச்சா் தங்கமணி, ‘துணை மின் நிலையம் அமைக்க முஸ்லிம் ஜமாத்தின் இடத்தைக் கேட்டுள்ளோம். அவா்களும் வாய்மொழியாக தருவதாகத் தெரிவித்துள்ளனா். உத்தரவாகத் தரவில்லை. எங்களுடைய அதிகாரிகளுடன் கலந்து பேசி வேறு இடத்தை ஆய்வு செய்து உறுப்பினா் கொடுத்தால் விரைந்து அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.