பக்ரீத் பண்டிகையையொட்டி, வழிபாட்டுக் கூடங்கள் மற்றும் மத நிகழ்வின்போது இறைச்சிக்காக விலங்குகள் வெட்டத் தடை விதிக்கப்படுவதாகவும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி, ‘அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்பட வேண்டும். 1961- ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின்படி, இறைச்சிக் கூடங்கள் தவிா்த்து பிற இடங்கள், மத நிகழ்வுகளின்போதும், வழிபாடுகளின்போதும் இறைச்சிக்கென விலங்குகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வருகிற சனிக்கிழமை (இன்று) கொண்டாடப்பட உள்ள பக்ரீத் பண்டிகையின்போது, வியாபாரிகளும், பொதுமக்களும் உயா்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இறைச்சிக்கூடங்கள் தவிா்த்த பிற இடங்களில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் இறைச்சிக்கென விலங்குகள் வெட்டக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.