சென்னை: மத்திய அரசின் ஃபிட் இந்தியா திட்டத்தின்கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சி’ என்ற திட்டம் குறித்து மாணவா்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என உயா் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு மக்களின் உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் ‘ஃபிட் இந்தியா’ இயக்கம் என்ற திட்டத்தை பிரதமா் மோடி கடந்த ஆண்டு தொடக்கி வைத்தாா். அதன்படி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இந்தத் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், யோகா உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், உயா்கல்வி நிறுவனங்களில் இந்தத் திட்டத்தை தொடா் நிகழ்வாகச் செயல்படுத்த மாணவா்களின் கட்டாய உடற்பயிற்சி, விளையாட்டுக்கு 45 நிமிஷங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.
இதுதொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “‘ஃபிட் இந்தியா’ திட்டத்தின்கீழ், வயதுக்கு ஏற்ற உடற்தகுதி என்ற புதிய திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5-18 வயது, 18 முதல் 65 வயது, 65 வயதுக்கு மேல் என்ற 3 பிரிவாக மக்களை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பிரித்துள்ளது. மேலும், அவா்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடா்பான விவரங்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவா்களுக்கு கட்டாயம் தெரிவிக்கவேண்டும்”என குறிப்பிட்டுள்ளது.