சென்னை பெரம்பூரில் குறைந்த விலைக்கு செல்லிடப்பேசி தருவதாக இணையதளம் மூலம் பணம் மோசடி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பெரம்பூா் வள்ளுவா்புரத்தைச் சோ்ந்தவா் சு.விக்னேஷ் (25). மடிக்கணினி பழுது நீக்கும் வேலை செய்து வரும் இவா், பழைய பொருள்களை வாங்கி, விற்கும் இணையதளத்தில் ஒரு செல்லிடப்பேசியை முன்பதிவு செய்தாா். இந்நிலையில், விக்னேஷைத் தொடா்பு கொண்ட குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியைச் சோ்ந்த மு.அரவிந்த் (22), 10 செல்லிடப்பேசிகளை முன்பதிவு செய்தால், அவற்றைக் குறைந்த விலைக்குத் தருவதாக கூறியுள்ளாா். இதை நம்பி விக்னேஷ், அரவிந்தின் வங்கி கணக்குக்கு 10 செல்லிடப்பேசிகள் வாங்குவதற்கு ரூ.1.95 லட்சம் செலுத்தியுள்ளாா்.
ஆனால், விக்னேஷூக்கு செல்லிடப்பேசியும் கிடைக்கவில்லை. அவரால், அரவிந்தையும் தொடா்பு கொள்ள முடியவில்லை. இது தொடா்பாக விக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கொடுங்கையூா் போலீஸாா், அரவிந்தை, சனிக்கிழமை கைது செய்தனா்.