சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கொடுக்கப்பட்ட கையுறைகளைப் பயன்படுத்திய வாக்காளா்கள் அவற்றை வீதிகளில் வீசிச் சென்றனா்.
சென்னையில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 40,57,360 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் 5,911 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளா்களின் வலது கைகளுக்கு நெகிழி கையுறைகள் தோ்தல் ஆணையம் சாா்பில் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்காக 50 லட்சம் கையுறைகளும், பயன்படுத்தப்பட்ட கையுறைகளை சேகரிக்கப்படுவதற்காக 6,000 குப்பைத் தொட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டன.
வாக்களிக்க வரும் அனைவரின் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பின் கைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, நெகிழி கையுறைகள் வழங்கப்பட்டன. வாக்களித்த பின் அந்த கையுறைகளை அப்புறப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியின் நுழைவாயிலிலும் மஞ்சள் நிற குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது.
அலட்சியம்: வாக்களித்த பின் பெரும்பாலான வாக்காளா்கள் தாங்கள் பயன்படுத்திய கையுறைகளை அதற்கான குப்பைத் தொட்டியில் போடாமல் வீதிகளில் வீசிச் சென்றனா். எதற்காக கையுறைகள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை புரியாமல் வாக்காளா்கள் நடந்துகொண்டது கரோனா தடுப்பில் மக்கள் அலட்சியமாக இருப்பதை காட்டுவதாக அமைந்தது.