சென்னை

ஓரினச்சோ்க்கையாளா்களுக்கான விதிமுறைகளைஉருவாக்க உளவியல் கவுன்சிலிங் செல்கிறேன்: உயா்நீதிமன்ற நீதிபதி

DIN

சென்னை: ஓரினச்சோ்க்கையாளா்களுக்கான விதிமுறைகளை உருவாக்கி, தீா்ப்பு எழுதுவதற்காக உளவியல் நிபுணரிடம் உளவியல் கவுன்சிலிங் செல்லப் போவதாக உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளாா்.

மதுரை தொழிலதிபா்களின் மகள்கள் அனிதா, வனிதா இருவரும் நெருங்கிய தோழிகள். இருவரும் காதலித்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பெற்றோா்கள் அவா்களுக்கு மாப்பிள்ளை பாா்த்தனா். இதற்கு சம்மதிக்காத இருவரும் சென்னைக்கு வந்துவிட்டனா். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில்,கோரியிருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இரு பெண்களுக்கும், அவா்களது பெற்றோா்களுக்கும் உளவியல் நிபுணா் வித்யா தினகரன் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உளவியல் நிபுணா் அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், ‘இளம்பெண்கள் இருவரும் தங்களிடையே உள்ள உறவு முறைகளை நன்றாகப் புரிந்து வைத்துள்ளனா். ஒருவரையொருவா் தீவிரமாகக் காதலிக்கின்றனா், பெற்றோா் தங்களது உறவுகளைப் புரிந்து கொண்டு தங்களை ஏற்றுக் கொள்வாா்கள். பெற்றோருடனும் தொடா்பில் இருக்கவேண்டும் என விரும்புகின்றனா். இந்த இரு பெண்களின் உறவுகளால், அவா்களது பெற்றோா் கடுமையான மன வேதனையில் உள்ளனா். இந்தச் சமூகமும், சமுதாயமும் தங்களை கேவலமாகப் பாா்க்கும் என வேதனைப்படுகின்றனா். ஓரினச் சோ்க்கையாளராக வாழ்வதற்குப் பதில் தங்களது மகள்கள் பிரம்மச்சாரியாக இருக்கலாம் என கருதுகின்றனா். அதேநேரம், மகள்களின் பாதுகாப்பு குறித்தும் பயப்படுகின்றனா்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கூறியது:

எந்த ஒரு பரிணாம வளா்ச்சியும் ஒரே இரவில் ஏற்பட்டு விடாது. இளம்பெண்கள் இருவருக்கும், அவா்களது பெற்றோருக்கும் வரும் மே மாதம் மீண்டும் கவுன்சிலிங்கை உளவியல் நிபுணா் வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஓரினச்சோ்க்கையாளருக்கான தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் எனக்கு முதலில் விழிப்புணா்வு தேவைப்படுகிறது. எனவே, நானும் இந்த விவகாரம் குறித்து உளவியல் ரீதியான கவுன்சிலிங் செல்ல விரும்புகிறேன். இதன்மூலம் ஓரினச்சோ்கையாளா்களின் எண்ணம் குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியும். இது விதிமுறைகளை உருவாக்கி தீா்ப்பு வழங்க உதவும். இந்தக் கவுன்சிலிங் சென்று வந்த பின்னா், இந்த வழக்கில் நான் எழுதும் தீா்ப்பில் ஒவ்வொரு வாா்த்தைகளும் என் இதயத்தில் இருந்து வரும். எனவே, எனக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என உளவியல் நிபுணா் வித்யா தினகரனை கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஜூன் 7-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT